Tuesday 10 June 2014

தோஷம்

செவ்வாய் தோஷம் : செவ்வாய்க்கு அங்காரகன், குஜன் என்ற வேறு பெயர்களும் உண்டு. செவ்வாய் தோஷம் திருமணப் பொருத்தத்துடன், இதுவும் இருவருக்கும் சமமாக உள்ளதா என்று பார்க்கப்பட வேண்டும். செவ்வாய் ஜென்ம லக்னம், சந்திரன், சுக்கிரன் இம்மூன்றுக்கும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும், ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் உண்டு. மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து தோஷம் பெற்றிருந்தாலும், சூரியன், குரு, சனி, ராகு, கேது இவர்களுடன் சேர்ந்தோ அல்லது இவர்களால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோஷ பரிகாரம் உண்டு. அன்றியும் செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகரம், சிம்மம் ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷ பரிகாரம் உண்டு. திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் எப்படி பார்க்கப்பட வேண்டும் என அறியலாம்.

அ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்க வேண்டும்.
ஆ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்கக் கூடாது.
இ ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் இருந்து பரிகாரம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்டபடி அமையாவிட்டால் பொருத்தம் இல்லை. அன்றியும் செவ்வாய் தசை இருவருக்கும் ஏற்கனவே முடிந்திருந்தாலோ அல்லது 60 வயதிற்கு மேல் வரவிருந்தாலோ தோஷம் இருவருக்கும் சமமாக அமையாவிட்டாலும் பொருத்தம் உண்டு.

2 ) புத்திர தோஷம் : புத்திரன் உள்ளதா இல்லையா என்று பார்க்கும் போது பொதுவாக ஆண் ஜாதகத்தை வைத்துதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஐந்தாமிடம் புத்திர ஸ்தானமாகும். குரு புத்திரகாரகன் ஆவார். குரு சுபஸ்தானத்தில் இருந்தாலும் 5 ஆம் இடத்தில் சுபர் இருந்தாலும் ஜாதகருக்கு புத்திரன், புத்திரி உண்டு. 5 ஆம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர தோஷம் உண்டு. இதற்கு நாக தோஷம் என்று பெயர். இவர்கள் நாக தோஷ பரிகாரம் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போது தான் தோஷம் நிவர்த்தி ஆகி புத்திர பாக்கியம் உண்டாகும்.
சில பரிகாரங்கள் :
அ) அரச மரம், வேப்ப மரம் இருக்குமிடத்தில் நாகப் பிரதிஷ்டை செய்து அர்ச்சனை அபிஷேகம் செய்ய வேண்டும். ஒரு மண்டலம் சுற்றி வர வேண்டும்.
ஆ) வெள்ளி நாகத்தை ஒரு மண்டலம் பூஜை செய்து சிவன் கோயிலில் செலுத்தி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இ) இராமேஸ்வரம், காளஹஸ்தி போன்ற புண்ணிய இடங்களுக்குச் சென்று நாகசக்தி செய்து சிவனை வழிபட வேண்டும்.

No comments:

Post a Comment